Saturday, 8 September 2012

திருவரங்கம் அரங்கநாத சுவாமி


மரண வாயில்


மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர்.

”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று.

எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை.

”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க இத்தனை நாளாய் நேரமே கிடைக்கவில்லை” என்றார்

. பட்டியலை சரி பார்த்துவிட்டு மரண தேவதை சொன்னது

, ”உன்னால் காயப்பட்டவர்கள் உத்தமர்கள். நீ காயப்படுத்திய அன்றே உனக்காக கடவுளிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டார்கள்” என்று.


மோசமான நண்பர்களைவிட மேன்மையான எதிரிகள் மேலானவர்கள்.

அச்சம் தவிர்


அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.

“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். 

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்

. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. 

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,

“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.

அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!

முயற்சி

அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.

ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.

அவள் வருத்தத்திலிருந்த போது

சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.

“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.

நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்

எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.

உன்னிடம் இருப்பதே உலகத்தில்


தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.

“அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள், 

“முடியாது” என்றார். 

‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட

“நீ கேட்டகுணங்களுடன் ஒரு மனிதனை நான் உருவாக்குவதைவிட இந்த குணங்கள் கொண்ட மனிதனாக நீயே உருவாகிவிடு. அப்படி உருவானால்

இந்த குணங்கள் எல்லோரிடமும் இருப்பதை கண்டுபிடிப்பாய்” என்று. 

உன்னிடம் இருப்பதே உலகத்தில்!!